வளவள’ பேச்சு காதலுக்கு ஆகாது…!

மனம் நிறைய காதல் இருந்தும் அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லையா? `சொல்லத்தான் நினைக்கிறேன்… சொல்லாமல் தவிக்கிறேன்… காதல் சுகமானது’ என்று நீங்களாகவே பாடிக் கொண்டிருக்காதீர்கள். இதோ இப்படிச் சொல்லிப் பாருங்களேன்…

* காதலைச் சொல்லச் செல்லும் முன்பாக சிறிதாக ஒத்திகை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் காதலியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் காதலை சொல்லும் வேளையில் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

* அவர், இயல்பான குணத்தில் இருக்கும் சாதாரண வேளைதான் உங்கள் அன்பை காதலாக மாற்றும் தருணமாகும். எனவே அவர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலைச் சொல்லத் தொடங்குங்கள்.

* காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். எந்தவித குணமுடைய பெண்ணாக இருந்தாலும் தனிமையில் சாந்தமாக இருப்பார்கள்.

* `நான் உங்களை காதலிக்கிறேன்’ என்று நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்கக்கூடாது. எனக்கு உங்களைப் பிடிக்கும், உங்கள் சிரிப்பு பிடித்திருக்கிறது, பல சிந்தனைகளில் நமது கருத்து ஒத்துப்போகிறது, உங்களது உதவும் குணம், எல்லோர் மீதும் பாசமாக இருப்பது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்புகிறேன் என்று கூறி பிறகு `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லலாம்.

* கையில் பூவுடன் செல்லுங்கள். அவள் நிற்கும்போது நீங்கள் காலை மண்டியிட்டு நின்று அவளது முகம் பார்த்து கைகளை நீட்டி பூவைக் கொடுத்து `ஐ லவ் மை ஸ்வீட் பேபி’ என்று சொல்லலாம். இப்படிச் சொல்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நாணம் மிகுந்த பெண், உள்ளார்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் பெண்களிடம் இந்த முறையில் காதலைச் சொல்லக்கூடாது. அவர்கள் திகைப்படைந்துவிடுவார்கள்.

* வார்த்தைகளை `வளவள’வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக்
கூடாது. பெண்கள் சாமர்த்தியசாலிகள். உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். இழுத்து இழுத்து பேசினால் விரும்ப மாட்டார்கள்.

* எல்லாப் பெண்களுக்கும் பூக்களைப் பிடிக்கும். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு (பொக்கே) கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. `உன்னோடு மட்டுமே இனி என் வாழ்வு கழிவதை விரும்புகிறேன்’ என்று உளமாறக் கூறுங்கள். அவருக்கும் உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

* பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது ராணுவ வீரன் போலவோ, இன்டர்விவில் மேலதிகாரி முன்பு நிற்பதுபோலவோ விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயா னவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, `அன்பே உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள். சொல்லும்போது உங்கள் மனம் உருகி கண்கள் செருகினால் கூட தவறில்லை. முழுக்க அவருக்கு பாதுகாப்பு அளிப் பது போலவும், உங்கள் வாழ்வு முழுவதும் அவரை சார்ந்திருப்பதுபோலவும் உங்கள் பேச்சும், உடல் அசைவுகளும் இருக்க வேண்டும். அவரைச் சுற்றி வந்து பேசுவது அதிகப்படியான காதலைக் குறிக்கும். ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண் கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

* புகழ்ச்சி எல்லோரையும் கவரக்கூடியதாகும். பெண்களுக்கு அவர்களின் அழகை வர்ணிப்பது மிகவும் பிடிக்கும்.