செயற்கை அழகு வேண்டாம்

பார்வை நிலை முடிந்து இயல்பாக பேசும் நிலையில் இருப்பதையே நிறைய பேர் காதல் என எண்ணிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அதிகப் பிரசங்கித் தனமாக ஏதாவது செய்யும் போதுதான் ஏடாகூடமாகிவிடுகிறது.

முதலில் ஆண்கள் பெண்களை எப்படி கவர்வது என்று பார்ப்போம்.

பார்வை நிலையில் வெற்றி அடைந்தாகிவிட்ட நிலையில் இனி புற அழகிற்கு என அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

இந்த நிலையில் ஒரு சிலர் கதாநாயகன் மாதிரி தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என நினைத்து நடை, உடை, பாவனைகளை மாற்றுவார்கள். இதனை பெண்கள் எவரும் விரும்புவதில்லை என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன.

தான் விரும்பும் நபர் ஓர் இடத்திற்குச் செல்லும்போது, அவரை பல்வேறு பெண்கள் ஆசையாக, ஆர்வமாக பார்ப்பது பொறாமையைத் தூண்டுவதுடன் எரிச்சலையும் கொடுத்துவிடும். அதனால் இயல்பாகவே இருங்கள்.

உங்கள் புறத்தோற்றம் பிடித்துப்போன பிறகு பேச்சு நிலைக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

அதனால் அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இனி கிடையாது. அதற்காக இத்தனை மிடுக்காக செய்துவந்த உடை அலங்காரம், உடல் தூய்மை என அனைத்தையும் விட்டுவிடலாம் என அர்த்தம் இல்லை.

தன்னிடம் ஓர் ஆண் பேசும்பொழுது வேறு எந்த தொந்தரவும் வருவதை பெண் விரும்பமாட்டாள். அதேநேரம் அவளது கண்களுக்கு நீங்கள் மிக அழகாகவே தெரிவீர்கள்.

இதற்கு ஓர் அழகான உதாரணம் சொல்லலாம்.

சுதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எத்தனையோ அழகான பையன்கள் அவளுடன் பேசுவதற்கு போட்டி போட்டார்கள். அவள் அனைவரையும் ஒரு புன்னகையுடன் ஒதுக்கிவிட்டாள்.

வழக்கமாய் அவள் வந்து செல்லும் பஸ்ஸில் கண்டக்டர் மிகவும் சுறுசுறுப்பாக, நாகரீகமாக பழகுவது அவளைக் கவர்ந்து இழுத்தது. அவர் அதிகமாகப் படிக்காதவர், மிகவும் கருப்பான நிறம் கொண்டவர். சுதாவை விட தாழ்ந்த ஜாதி என எதுவுமே அவளை பாதிக்கவே இல்லை.

சுதாவே அவளது காதலை அவனிடம் சொன்னாள். இன்று அவர்கள் இருவரும் ஒரு வெற்றிகரமான தம்பதியராக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த சுதாவைப் போன்றுதான் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் தனது காதலன் நல்லவனாக, வல்லவனாக, நகாரீகமானவனாக, உழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, அழகுக்கு அல்ல.

சினிமா நட்சத்திரங்களைப் போன்று தலை அலங்காரம், உடை அலங்காரம் செய்வது எல்லாம் நகைச்சுவையாகவே தெரியுமே தவிர, மனதினைக் கவராது. அதனால் முதலில் எப்படி இருந்தீர்களோ அப்படியே எப்போதும் இயல்பாக இருங்கள். தேவையின்றி நீங்களும் குழம்பி, பெண்களையும் குழப்பாதீர்கள்.

பேரா‌சி‌ரிய‌ர் டா‌க்ட‌ர் டி.காமரா‌ஜ் webdunia.com