காதலில் நிபந்தனை வேண்டாமே…

0

wedding-dress-bridalஇந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்குள்ளும் காதல் இல்லாமல் இருக்காது. அப்படி காதல் செய்து திருமணம் செய்பவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் பெரும்பாலும் இருக்காது. இதற்கு பெரும் காரணம் இந்த காதலில் நிபந்தனை இருப்பதே ஆகும். பொதுவாக காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் இந்த உலகில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கேட்டால் அதுவும் மிகவும் குறைவானதாகவே இருக்கும். அதிலும் காதல் செய்து திருமணம் செய்பவர்களுக்குள் சண்டைகள் வருவதற்கு பெரும் காரணம், உபயோகிக்கும் வார்த்தைகளே. அது என்ன நிபந்தனை என்று கேட்கிறீர்களா?

உதாரணமாக, பொதுவாக காதலானது ஒருவர் மீது வருகிறதென்றால், ஒன்று அது அவர்கள் உங்கள் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருப்பதாலும் வரும், மற்றொன்று நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் துணை கேட்பதாலும் வரும். அவ்வாறு நீங்கள் சொல்லி கேட்டு வரும் காதலில் எந்த ஒரு சந்தோஷமும் இருக்காது. அவ்வாறு சந்தோஷம் இருந்தாலும் அது நீண்ட நாட்கள் நிலைப்பது இல்லை.

அவ்வாறெல்லாம் இல்லை என்று நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் எதாவது சொல்லி, அவர்கள் செய்யாமல் இருந்து, உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் அதுவே உண்மையானக் காதல். அத்தகையவர்களது காதல் அல்லது திருமண வாழ்க்கையிலேயே எந்த ஒரு சண்டையும், பிரச்சனையும் இருக்காது.

இத்தகைய காதல் அல்லது திருமண வாழ்க்கையில், கணவன்-மனைவி இடையே எந்த ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க ஒருசில வழிகளை அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

மனைவியானவள் பொட்டு வைத்தாலும் சரி, வைக்காவிட்டாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, நன்றாக சமைத்தாலும் சரி, சமைக்காவிட்டாலும் சரி, கணவன் தன் மனைவியை காதலிக்க வேண்டும். இதே நிபந்தனையற்ற காதலை மனைவியும் கணவனிடம் செலுத்த வேண்டும்.

உங்கள் கணவன்/மனைவியிடம் என்ன இல்லை என்று பார்க்க வேண்டாம். பணம் இல்லையென்றால் உங்களை விட்டு போகாமல், உங்களிடம் சண்டை போடாமல், உங்கள் மீது பரிவை, அதே அன்பைக் காட்டுகிறார்களா என்பதைப் பார்த்து சந்தோஷப்படுங்கள்! ஏனெனில் குடும்பம் என்னும் மலரிலிருந்து தேன் என்னும் இனிமையை அப்போது தான் பெற முடியும்.

மிகவும் முக்கியமான ஒன்று எந்த ஒரு தேவையில்லாத அசிங்கமான வார்த்தைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் பல உணர்ச்சிகள் நரம்புகளிடையே ஆங்காங்கு உள்ளது. அது உடைந்து வெளிவர துடித்துக் கொண்டிருக்கும். எப்படி வெடிகுண்டுகளில் சிறிது நெருப்பு பட்டால் உடனே வெடிக்குமோ, அது போல் நாம் பயன்படுத்தும் ஒரு சில வார்த்தைகள் வாழ்க்கைத்துணைக்கு கோபத்தை ஏற்படுத்தி, பின் வாழ்க்கையே நாசமாகிவிடும்.

எப்படி நடக்கத் துடிக்கும் ஒரு குழந்தை தத்தக்கா, பித்தக்கா என்று நடக்கம் போது விழும் போது, தாய் தந்தை அருகில் இல்லாத போது அழுகாமல் மறுபடியும் நடக்கும். அதே தாய் தந்தை பக்கத்தில் இருந்தால் அழத் தொடங்கும். அதேப்போல் தான் அனைத்து மனிதர்களுக்கும் இந்த குணநலன் இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு கணவன்/மனைவியும் தன் துணையிடம் என்னை கவனி, என்னை கவனி என்று மௌனமாக கத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை கவனிப்பு. ஆகவே இதை புரிந்து கொண்டு கவனிப்பு என்னும் கதவை திறந்தே வைத்திருங்கள்.

இவ்வாறெல்லாம் இருந்தால் வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

Leave a Reply