விரைவில் வீதிகளுக்கு வரும் சாரதியற்ற கார்கள் : கூகுளின் புதுமையான முயற்சி

0

Google-carஇணையத்தின் வல்லரசாக விளங்கும் கூகுளின் திட்டங்கள் ஒவ்வொன்றும் காலத்தின் தேவையை உணர்த்துவதாகவும் எதிர்காலத்தினை இன்றே அனுபவிப்பதாகவும் அமையும்.

அந்த வரிசையில் கூகுள் மேற்கொண்டு வரும் புதிய முயற்சியொன்று விரைவில் அனைவரும் வியப்பில் ஆழ்த்தவுள்ளது.

அதாவது அதிகரித்து வரும் வாகன நெரிசல், விபத்துக்கள் மற்றும் குறைந்து வரும் பார்க்கிங் (தரிப்­பிட) வசதிகளை கருத்திற்கொண்டு சாரதியற்ற ரொபடிக் காரினை உருவாக்கும் திட்டத்தினை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்துவருகின்றது.

சாரதியற்ற கார் என்ற விடயம் ஒன்றும் நமக்கு புதிதல்ல. என்றாலும் அவை விஞ்ஞான புனைக்கதைகளாக மட்டும் நமக்கு காட்சியளித்தது. அந்த கற்பனை உலகத்தில் பயணித்த ரொபடிக் கார்கள் விரைவில் வீதிகளில் பய­ணிக்­கப்போகின்றது.

அந்த கற்பனைக் காரில் எம்மையும் பயணம் செய்ய வைக்கவுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் “ஸ்ட்ரீட் வீவ்” காரின், இணை கண்டுபிடிப்பாளரும் ஸ்டேன்போர்ட் செயற்கை அறிவு ஆய்வுகூடத்தின் இயக்குநருமான பொறியியலாளர் ஸெபாஸ்டியன் த்ரன் தலைமையில் கிறிஸ் அர்ம்ஸன், மைக் மொன்டெமெர்லோ மற்றும் அந்தனி உள்ளிட்ட 15 பொறியியலாளர்கள் இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

இவர்களின் திட்டத்துக்கு ஒத்துழைக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29ஆம் திகதியன்று சாரதியற்ற ரொபட்டிக் கார் சோதனைகளுக்கு அமெரிக்காவின் நிவேடா மாநிலம் அனுமதியளித்தது.

இதனைத் தொடர்ந்து சாரதியற்ற காரின் ஓட்டம் மெல்ல மெல்ல வேகமெடுக்க ஆரம்பித்தது. இதன் வளர்ச்சியாக அண்மையில் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் பரீட்சார்த்தமாக கூகுளின் சாரதியற்ற கார் ஓடிச் சென்று தரிப்­பி­டத்­திற்­கு தானாக சென்றுள்ளது.

இது சாரதியற்ற ரோபோட்டிக் காரின் அடுத்­த­கட்ட வளர்ச்­சி­யா­க அமைந்துள்ளது. இருப்பினும் சாரதிகளற்ற கார் எனும் திட்டத்தினை கூகுள் நிறுவனம் மட்டுமே முன்னெடுக்கவில்லை.

ஏற்கெனவே ஏ.எம்.டபள்யூ, ஓடி, மெர்ஸிடெஸ் போன்ற கார் நிறுவனங்களும் சாரதியற்ற ரோபோட்டிக் கார்களை வடிவமைப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இணையத்துடன் கார்களை இணைத்து சாரதியற்ற தன்னியக்க கார்களை உருவாக்க எண்ணியிருப்பதாக ஓடி மற்றும் டொயோட்டோ நிறுவனங்கள் இவ்வருட ஆரம்பத்தில் கருத்து தெரிவித்திருந்தது.

பல பில்லியன் டொலர்கள் முதலீட்டில் எதிர்காலத்திற்கான மோட்டார் கார்களை உருவாக்குவதே இந்நிறுவனங்களில் திட்டமாகும். இதற்காக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் வாகனங்களை செலுத்தும் போதே வாகன ஓட்டுனரின் ஒலிக்கேற்ப இயங்கும் இணைய வசதியினையும் இக்காரில் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் பாதைகளுக்கான வழிகாட்டி, பார்கிங் வழிகாட்டி, ரெஸ்டூரன்ட் விமர்சனங்கள், சமூக வலைத்தளங்கள் என இணைய வசதியினை வாகனம் செலுத்தும் போதே தொடுகைகள் எதுவுமின்றி குரள் கட்டளையில் இயங்கும் வண்ணம் அனுபவிக்கலாம்.

இந்த இணைய வசதியுடைய கார்களை அடுத்த ஆண்டிலேயே வெற்றிகரமாக உருவாக்கிவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் சாரதியற்ற ரொபோடிக் கார் எப்போது மோட்டார் நிறுவனங்களுக்கு சாத்தியப்படும் எனத் தெரியவில்லை.

இருப்பினும் சாரதியற்ற ரொபோடிக் கார்களை 2017ஆம் ஆண்டளவில் சந்தைப்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது கூகுளின் காரில் பொருத்தப்பட்டுள்ள மென்பொருள் அக்காரை அதிகூடுதலாக மணிக்கு 25 கி.மீற்றர் தூரத்திற்கு செல்லும் விதமாக மட்டுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்துக்களை குறைப்பது திட்டம் என இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியாபார நகரங்களில் 30 சதவீதமானோர் தரிப்பிட வசதிகள் இன்றி வருடத்திற்கு சுமார் ஒரு பில்லியன் மைல்கள் வீணாக கார்களில் பயணிக்க வேண்டி ஏற்படுகிறது என அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை இந்த சாரதியற்ற ரோபோடிக் கார்களால் தவிர்க்க முடியும் என கூறுகிறார்கள்.

இந்த கார் குறித்து ஸ்டென்போர்ட் தன்னியக்க வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர் பிரையன் வோக்கர் ஸ்மித் கூறுகையில், “சாரதியற்ற கார் என்பது தவிர்க்க முடியாதவொன்றாக மாறும். அதுவொரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். காரில் தூங்கலாம், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். எமக்குத் தேவையானவற்றையும் அந்த ரொபோடிக் கார்கள் விநியோகிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாகவே விஞ்ஞானக் கற்பனைக் கதைகள் பல நிஜமாகி வருகையில் சாத்தியமிக்க கூகுளின் சாரதியற்ற ரொபோடிக் காரும் விரைவில் சாத்தியமாகும். அதில் நாமும் ஏறிப் பயணம் செய்யப்போகும் நாளும் நெருங்கிக்கொண்டே இருக்கிறது.

எனவே சாரதிகளின் உதவியின்றி விரைவில் எம்மை ஏற்றிச்செல்லவுள்ள கார்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்போம்.

Leave a Reply